பூக்காலம். குளிர்ந்த காலைக் காற்று சோம்பலூட்டியது. சோல் மாநகர் தன் வளர்ச்சியின் மந்திரத்துடன் அந்நாளையும் தொடங்கியிருந்தது. அது ‘ப்பள்ளி ப்பள்ளி’. அதற்கு மாறாக அவள் தன் ஆய்வகத்துக்கு மெதுவாக நடந்தாள்.
குவானாக் மலைச்சரிவில் அமைந்த நக்சொங்தே மலையூடு வழி. ஓர் அரைவட்ட வடிவக் குகை. அதன் ஊடே செல்லும் சாலையின் இருமருங்கிலும் குறுகிய நடைபாதைகள். சாலைக்கும் பாதைகளுக்கும் இடையில் உயரமான கண்ணாடித் தடுப்புகள் பொருத்தப்பட்டிருந்தன. அத்தடுப்புகளில் ‘பூனையைத் தேடுகின்றேன்’ என்ற அறிவிப்புத் தாள்கள் வழிநெடுக ஒட்டப்பட்டிருந்தன. முந்தைய நாளிரவு வீடு திரும்பும்போது அவை இல்லை. அறிவிப்பில் காணாமல் போன பூனையின் புகைப்படமும் இருந்தது. விவரமறிய மொழிபெயர்த்துப் பார்த்தாள்.
பழுப்பு நிறப் புள்ளிகள், குட்டை வால், மூக்கில் பெரிய புள்ளி ஆகியவை அதன் தோற்றப் பண்புகள். பூனையை வளர்ப்பவர் இப்பண்புகளைப் பூவிற்குப் பாகங்கள் குறிப்பது போல் வட்டமிட்டுக் காட்டியிருந்தார். பயனுள்ள துப்புக் கொடுப்போருக்குப் பரிசுத்தொகையாக இரண்டு லட்சம் வான்களை அறிவித்திருந்தார். அது இந்திய ரூபாயில் ஏறத்தாழப் பன்னிரண்டாயிரம். அருகில் சென்றால் ஓடிவிடும் என்பதால் தொலைவிலிருந்து புகைப்படம் அல்லது காணொளி எடுத்து அனுப்பக் கேட்டிருந்தார்.















Add Comment