அமெரிக்க மண்ணில் குடியேறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுவே தற்போதைய அமெரிக்க அரசின் மிகத்தீவிரமான முன்னெடுப்பு. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கச் சட்டத்துக்கு உட்பட்டுக் குடியுரிமை பெறக் காத்திருக்கும் அனைவருமே இந்த அரசின் இலக்காக மாறியுள்ளனர். தங்களது சொந்த நாட்டில் அச்சுறுத்தலும் பாதுகாப்பின்மையும் துரத்தும் நிலையில், அமெரிக்க மண்ணில் புகலிடம் கேட்டு வந்தோரும் மனிதாபிமானமின்றி வெளியேற்றப்படுகின்றனர்.
அமெரிக்க மண்ணில் பிறப்பவர்க்கு அமெரிக்கக் குடியுரிமை உண்டு. வெளிநாட்டுத் தூதர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும், நாட்டின் மீது போர் தொடுக்கும் எதிரிப் படையினரின் குழந்தைகளுக்கும் மட்டும் குடியுரிமைக்கு அனுமதி கிடையாது. அவர்களைத் தவிர இம்மண்ணில் பிறக்கும் எவர்க்கும் இங்கே குடியுரிமை கிட்டும். அவரது பெற்றோர் அமெரிக்கரா, வெளிநாட்டவரா அல்லது சட்டப்படி இந்நாட்டிற்குள் வந்தவரா என்பதெல்லாம் பொருட்டல்ல.
ஒருவர் இங்கு பிறந்தாலே அவர் அமெரிக்கர்தான். இதுவே Birthright Citizenship எனப்படும் பிறப்புரிமைக் குடியுரிமை. 1868ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க அரசியல் சாசனத்தின் பதினான்காவது சட்டத் திருத்தம் அளித்து வரும் உரிமை இது. இந்த உரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதில் முழு முனைப்புடன் செயல்படுகிறது அதிபர் டிரம்ப்பின் அரசு.
















Add Comment