காலை வேளையில் ஜன்னலுக்கு வெளியே மரக்கிளையிலோ பால்கனியிலோ சிட்டுக்குருவிகள் கீச்சிடுவதைக் கடைசியாக எப்போது கேட்டீர்கள்? குருவிகளின் குரல் நினைவிருக்கிறதா? சிறுநகரம், கிராமத்தில் என்றால் வீட்டுக்குள் குருவி உரிமையாகக் கூடு கட்டும். முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, அக்குஞ்சுகள் இறக்கை முளைத்துப் பறக்கும் வரை வீட்டு உரிமையாளர்கள் அவற்றைத் தொந்தரவு செய்யமாட்டார்கள். குருவிக் கூட்டைக் கலைப்பது பாவம் என்றும் கூறுவார்கள். கூடு கட்டிய குருவிகளும் சுதந்தரமாக வந்து செல்லும். இப்போதும் கிராமங்களில் குருவிகள் அதே உரிமையுடன் வலம் வருகின்றன.
நகரங்களில் குருவிகளைப் பார்த்து, அவற்றின் குரலைக் கேட்டு இருபது வருடங்களாவது இருக்கும். மக்கள்தொகைப் பெருக்கம், கட்டடங்கள் அதிகரிப்பு, வாகனப் புகை, மரங்கள் குறைந்து போனது போன்ற காரணங்களால் சிட்டுக்குருவிகள் நகர்ப்புறங்களில் மறைந்துவிட்டன. கூடு கட்ட இடமும், உணவுக்குப் பூச்சிகளும், மற்ற ஆதாரங்களும் இல்லை என்றால் அவையும் என்ன செய்யும்? அவற்றின் அடிப்படை வாழ்வாதாரத்தையே நகரங்கள் பாதித்துவிட்டதால், வேறு வழியில்லாமல் அவை நகர்ப்புறங்களில் இருந்து காலி செய்துவிட்டன.
மீண்டும் சிட்டுக் குருவிகளை நகரங்களுக்கு வரவழைக்க வேண்டும் என்று ஐதராபாத்தில் உள்ள அனிமல் வாரியர்ஸ் கன்செர்வேஷன் சொசைட்டி தீர்மானித்தது. ‘சிட்டுக் குருவிகளை மீட்டெடுப்போம்’ (Bring Back Sparrows) என்ற பிரசாரத்தைத் தொடங்கியது. இந்த அமைப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
















Add Comment