சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு வாக்காளர் பட்டியலை முடக்கியுள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம். 2026 பிப்ரவரி முதல் வாரத்தில் இப்பணிகள் முடிவடைய உள்ளன.
வாக்காளர் பட்டியல் தொடர்ந்து சீர்திருத்திப் பராமரிக்கப்படவேண்டிய ஒன்றுதான். நகரமயமாக்கல் காரணமாக மக்கள் அதிகளவில் இடம்பெயர்கிறார்கள். புதிதாக வசிக்கும் இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொண்டு பழைய வசிப்பிடத்தில் தங்கள் பெயரை நீக்காமலே வைத்திருப்பார்கள். இளைஞர்கள் வாக்களிக்கும் வயதை அடைவதால் அவர்கள் பெயரைச் சேர்க்கவேண்டும். இதுபோன்ற காரணங்களால் இதுவரை எட்டு முறை இந்திய வாக்காளர் பட்டியலில் பெரியளவில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அதிகளவில் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள் என்ற காரணத்தையும் இணைத்து இம்முறை சீர்திருத்தம் நடைபெறுகிறது.
அதிகாரிகள் என்ன செய்யவேண்டும் எனப் பயிற்சியளிக்க ஒரு வார காலம். அடுத்த ஒரு மாத காலத்துக்குள் வீடு வீடாகச் சென்று தகவல் சேகரிப்பு. புதிய வாக்காளர்களை இணைக்க, படிவம் கொடுப்பது. அதைப் பூர்த்தி செய்ய உதவுவது. ஒவ்வொரு வாக்காளர் வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை செல்வது. இணையத்தில் விண்ணப்பப் படிவம் பெறுவது. இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ள வாக்காளர்களை அடையாளம் காண்பது. இப்படிப் பல்வேறு பணிகள் உள்ளன. 55 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கையாளத் தோராயமாக 5 லட்சம் பேர் பணியாற்றுவர்கள். அதுவும் இந்தப் பருவமழைக் காலத்தில். மேற்குறிப்பிட்ட வேலைகளை ஒரு மாதத்தில் முடித்து, உடனுக்குடன் ஐந்தே நாள்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் புகார்கள் இருந்தால் முறையிடவும் சரி செய்யவும் முழுதாக இரண்டு மாதங்கள்கூட அவகாசம் கிடையாது.















Add Comment