20 கானே பீனே ஸோனே
கொல்லத்திலிருந்து புறப்பட வரிசையில் நிற்கையில், மூன்று நாள் கடந்து விட்ட தைரியமும் அதிகாலை இருட்டோடு சேர்ந்துகொள்ள, தன் இடத்தை விட்டு, குரங்குக் குல்லாவை மடித்து காதுவரை இழுத்துவிட்டுக்கொண்டு நின்றிருந்த சுதீர் ரவுத் அருகில் போய் நின்றுகொண்டான்.
‘ஹாய்‘
‘ஹாய். ஹவ் ஆர் யூ‘ என்றான் சுதீர்.
‘புறப்பட ஏன் தாமதமாகிறது‘
‘ஹு நோஸ்‘ என்று ஏறிவிட்டிருந்த உல்லன் குல்லா காதை முழுதாக மூடிக்கொள்ளும்படி கீழே இழுத்துவிட்டுக்கொண்டான். ஆள் பார்க்க நரம்பு புடைக்க இருக்கிறான். குளிருக்கு இவ்வளவு பயமா. மார்கழிக் குளிரெல்லாம் ஒரு குளிரா. எல்லாக் காலங்களிலும் எவ்வளவு இரவுகளை நம்பி துறை சமயவேல் என்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தே விடிய வைத்திருக்கிறோம்.
சுதீர் அதிகம் பேசுபவனில்லை என்பது அறிமுகத்தின்போதே தெரிந்துவிட்டது.
‘அவ்வளவு குளிராகவா இருக்கிறது‘ என்று பேச்சுக்கொடுத்தான்.
‘இல்லை. முன்ஜாக்கிரதைதான்‘ என்றான்.















Add Comment