1. அடிவாரம்
மலைகள், தூரத்து ரகசியங்களென மோன நிலையில் தனித்திருந்தன. பகல்நேர வெயிலில் அவை நீலநிறம் கொண்டு கவிழ்த்து வைக்கப்பட்ட மலர் மொக்குகளெனக் காட்சி அளித்தன. மாலை மயங்கி இரவு சேரும் முன்னால் அடர் வனங்கள் கரும்பச்சை வண்ணம் கொண்டு பயமுறுத்தின. மாலையில் அங்கிருந்து இறங்கும் காற்றில் ஈரம் கலந்திருந்தது. இந்தக் கொடும் வெயில் வானிலையை அது பெருமளவு தணித்தது. மழைக்காலங்களில் வெள்ளிக் கம்பிகளென வழியும் தூரத்து அருவிகள் மயக்குவதாக இருந்தன. மலையேற வழியில்லை என்ற ஏமாற்றம் ஒவ்வொரு நிமிடமும் தாக்கிக் கொண்டிருந்தது.
ஜான் சல்லிவன் எம்.சி.எஸ். (மதராஸ் சிவில் சர்வீஸ்) என்கிற கோயம்புத்தூர் கலெக்டருக்கு அப்போது இருபத்தெட்டு வயது. கோயம்புத்தூர் வந்த முதல் நாளிலிருந்து அந்தத் தூரத்து மலைகளை நோக்கித் தவமிருந்தார். ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். இங்கிலாந்துக் குளிர் காலநிலையின் சொகுசில் வளர்ந்த உடலுக்கு மெட்ராஸும், செங்கல்பட்டும் புழுதியையும், வெயிலையும், கடும் புழுக்கத்தையுமே பரிசாகத் தந்தன. எதையும் குறை சொல்லமுடியாது. அப்பாவின் சிபாரிசில் பதினைந்து வயதிலேயே கப்பலேறி இந்த நாட்டிற்கு வந்து சேர்ந்தாகிவிட்டது. ஏதேனும் சாதிக்கவேண்டும் என்ற வெறி ரத்தத்தில் இருந்தது.
ஆனால் அமைந்தது குமாஸ்தா பணிதான் என்றபோதும் சற்றும் தளரவில்லை. பன்னிரண்டு வருடங்கள் கொடுத்த கடும் உழைப்புக்கும், படிப்புக்கும் பரிசு கிடைத்திருக்கிறது. கோயம்புத்தூர் ஜில்லா ஆட்சியர் பதவி. இங்கு வந்த பிறகும் அதே கோப்புகள், வரிகள், வருமானத்தைப் பெருக்கும் திட்டங்களெனச் சற்றே அலுப்பு வந்தபோது அந்த நீலமலைகள் நம்பிக்கை விதைத்தன. இங்கு ஏதோ தனக்கான அருஞ்செயல் காத்திருக்கிறது என்று நம்பினார்.















Add Comment