இந்திய சுதந்தரம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த ஆகஸ்ட் 15, 1947 அன்று சென்னை எப்படி இருந்தது? ஆனந்தச் சுதந்தரம் அடைந்துவிட்டோம் என்று அன்றைய மதராஸ் மாநகரும் கூத்தாடிக் கொண்டிருந்ததா? என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்தன? அப்போது வெளிவந்த பத்திரிகைகள் சிலவற்றின் மூலமும், அன்று சிறுவர்களாக இருந்து காட்சிகளைக் கண்ணுற்ற சிலரிடம் பேசியும் இந்தத் தகவல்களைத் திரட்டினோம்.
அப்போது தொலைக்காட்சி வந்திருக்கவில்லை. வானொலி பிரபலமாக இருந்தது. சென்னை வானொலி நிலையம் தொடங்கப்பட்டு இருபது வருடங்கள் ஆகியிருந்தன. ஆனால் ஆகஸ்ட் 14, 1947 அன்று வரையிலுமே அது பிரிட்டிஷ் அரசின் ஒலிபரப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கி வந்தது. அன்று மதியத்திலிருந்துதான் விதிகள் தளர்த்தப்பட்டன. இனி சுதந்தரமாகச் செய்திகளும், பாடல்களும் ஒலிபரப்பப்படலாம் என்று அறிவிப்பு வந்தது. வானொலியின் வழிதான் சென்னைவாசிகளுக்கு இந்தியச் சுதந்தரக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன.
அதுவரை ஆங்கிலேயர்களின் கொள்கைப்படி காந்தியடிகளை மிஸ்டர்.காந்தி என்றே அழைத்து வந்தது வானொலி. அந்தத் தருணத்திலிருந்து மகாத்மா காந்தி என்ற பொதுமக்களின் பதத்திற்கு இறங்கி வந்திருந்தது. போலவே, தடை செய்யப்பட்டிருந்த ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்திருக்கிறது. சுதந்தர தினத்தை ஒட்டி விடிய விடியச் சிறப்பு நிகழ்ச்சிகள் இருப்பதாக அறிவித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். சென்னை மெரீனா கடற்கரையின் திருவல்லிக்கேணி பகுதியில் பொதுமக்கள் கேட்பதற்காக வானொலி ஒலிபரப்பான் ஒன்று அப்போது அமைக்கப்பட்டிருந்தது. சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக இன்னும் ஒரு கூடுதல் ஒலிபரப்பானையும் அமைத்திருந்திருக்கிறார்கள்.















அருமை!