கருவூர்ச் சித்தர் சொன்னார், உன்னைப் புரிந்துகொள்கிறேன் சார்வாகனே. கருத்தளவில் நாம் எதிரெதிர் முனைகளில் நிற்பவர்கள். ஆயினும் மனித குலத்தின் மீது உனக்குள்ள அன்பை வணங்குகிறேன்.
உனக்கு முற்றிலும் விளங்க வைக்க என்னால் இயலாது சார்வாகனே. ஆனால் கோயில்களைத் தகர்ப்பதன் மூலம் மன்னர்கள் மீதல்ல; மக்களின் மீது யாரோ தொடரத் திட்டமிட்டிருக்கும் போர் இது.
கருவூர்ச் சித்தர் வேட்டனுக்கு மரணமிலாப் பெருவாழ்வை ஆசியாக வழங்கியது உண்மையென்றால் அதற்கொரு காரணம் நிச்சயமாக இருந்திருக்கும். ஆசி பொய்க்காதென்றால் காரணம் பொய்க்குமா?
நீ நம்பாத போதிலும் உன் சிந்தையில் வேறு யாரோ புகுந்து உன்னைப் பயன்படுத்திச் சில நாசச் செயல்களுக்குத் திட்டமிடுவது உண்மையப்பா! மீண்டும் சொல்கிறேன். நீ நம்ப வேண்டாம்.